துபாய்: இளையர்துறை அமைச்சர் பதவிக்கு விண்ணப்பம் செய்யலாம் என அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திற்குள் 4,700 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன.
அமைச்சர் பதவிக்கு இப்படிப் புதுமையான முறையில் ஆள்தேடுவது பற்றி ஐக்கிய அரபுச் சிற்றரசு (யுஏஇ) துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் ஞாயிற்றுக்கிழமை தமது எக்ஸ் (டுவிட்டர்) சமூக ஊடகப் பக்கம் வழியாக அறிவித்திருந்தார்.
யுஏஇ அரசாங்கத்தில் இளையர்துறை அமைச்சர் பதவிக்கு அந்நாட்டைச் சேர்ந்த இளம் ஆண்களும் பெண்களும் விண்ணப்பம் செய்யலாம் என்று துபாய் ஆட்சியாளருமான அவர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, அப்பதவிக்கு இதுவரை 4,700 விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளதாக யுஏஇ அமைச்சரவையின் தலைமைச் செயலகத்தைச் சுட்டி, ‘கல்ஃப்’ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு ஷாமா பிந்த் சொகைல் ஃபரிஸ் அல் மஸ்ருய் என்ற பெண், தமது 22ஆவது வயதில் இளையர் விவகாரத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் உலகின் ஆக இளைய அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார்.