ஜெனீவா: அடுத்த ஆண்டு (2024) விமானப் பயணங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 4.7 பில்லியன் பேர் அடுத்த ஆண்டு விமானப் பயணம் மேற்கொள்வர் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஒப்புநோக்க, கொவிட்-19 கிருமிப் பரவலுக்குமுன், 2019ஆம் ஆண்டு 4.5 பில்லியன் பேர் விமானப் பயணம் மேற்கொண்டனர். அதைவிட 4 விழுக்காடு அதிகமானோர் அடுத்த ஆண்டு விமானத்தில் பயணம் செய்வர் என்று கருதப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் இந்த விவரங்களை வெளியிட்டது.
2024ல் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் விமானப் போக்குவரத்துத் துறையின் நிகர லாபம் 25.7 பில்லியன் அமெரிக்க டாலரை ($34.4 பில்லியன்) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம், 320 விமான நிறுவனங்களைப் பிரதிநிதிக்கிறது. மொத்தத்தில் உலகளாவிய விமானப் போக்குவரத்தில் 83 விழுக்காடு இந்த நிறுவனங்கள் வாயிலாக நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டில் விமானப் போக்குவரத்துத் துறையின் வருவாய், சாதனை அளவாக, 7.6 விழுக்காடு அதிகரித்து 964 பில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவாகக்கூடும். இந்த ஆண்டு அது 896 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் நிகர லாபம் 23.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு 25.7 பில்லியன் டாலர் நிகர லாபம் ஈட்டினால் அது விமானப் போக்குவரத்துத் துறையின் மீள்திறனைப் பிரதிபலிக்கும் என்று சங்கம் கூறியது.