யாவுன்டே: கெமரூன் நாட்டின் அதிபராக எட்டாவது தவணைக் காலத்துக்குப் பதவி வகிக்கும் விருப்பத்தைத் திரு பால் பியா அறிவித்துள்ளார். அவருக்கு வயது 92.
பதவியில் தொடர்ந்து நீடிக்கும்படி எண்ணற்ற அழைப்பு வந்ததை அவர் குறிப்பிட்டார். ஆனால் இவ்வாண்டு தேர்தல் களத்தில் திரு பியா அடுத்தவர்களுக்கு வழிவிடவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
அதிபர் பதவியில் திரு பியா தொடர்ந்து நீடிப்பது சாத்தியமற்றது என்று பிரெஞ்சு வானொளிக்குக் கடந்த ஆண்டு டிசம்பரில் பேட்டிக் கொடுத்தபோது சொன்னார் கத்தோலிக்க பேராயர் சேமுவல் கிளேடா.
அதையடுத்து கெமரூனின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த இரண்டு அமைச்சரவை உறுப்பினர்களும் திரு பியா அதிபராக நீடிக்க தகுதியா என்று வெளிப்படையாகக் கூறினர்.
இறுதியாக திரு பியாவின் சொந்த மகள், 27 வயது பிரெண்டா பியா, தமது தந்தை பலரை வேதனைப்படுத்தியவர் என்று டிக்டாக்கில் கடந்த மாதம் குறைகூறி தமது தந்தைக்கு வாக்களிக்கவேண்டாம் என்றார்.
இத்தனை விமர்சனங்களையும் தாண்டி கெமரூனில் இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் திரு பியா வெற்றி வாகை சூட அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.
பல காரணங்களால் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குத் திரு பியா பதவியைத் தக்கவைத்ததாக அரசியல் வல்லுநர்கள் கூறினர்.
திரு பியாவுக்கு மக்கள் கொடுக்கும் அசைக்க முடியாத ஆதரவு, முறைகேடான தேர்தல் அமைப்புகள், விசுவாசமான ராணுவம், பிணக்கம் நிறைந்த எதிர்க்கட்சிகள் போன்ற முக்கிய காரணங்களால் திரு பியா இந்த முறையும் அதிபராகப் பொறுப்பேற்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதிபர் என்று வந்துவிட்டால் மக்கள் பெரியளவில் யோசிப்பதில்லை. அதிபர் இருந்தால் அவர் பார்த்துக்கொள்வார் என்ற நிபுணர்கள் தெரிவித்தனர்.
1982ஆம் ஆண்டிலிருந்து திரு பியா அதிபர் பதவியை இறுகப் பிடித்துவருகிறார்.
1984ஆம் ஆண்டு அவரை ஆட்சியிலிருந்து கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
2008ஆம் ஆண்டு அதிபருக்கான இரண்டு தவணை காலக்கெடுவுக்கான அரசமைப்புச் சட்டத்தில் திரு பியா திருத்தம் செய்தார்.