கோலாலம்பூர்: நோன்புப் பெருநாளை முன்னிட்டு மலேசியாவில் உள்ள 43 சிறைச்சாலைகளிலிருந்து மொத்தம் 937 கைதிகளை மலேசிய அரசு விடுவித்துள்ளது.
சிலாங்கூர், கோலாலம்பூர் சிறைகளிலிருந்த 899 ஆண் கைதிகளையும் 38 பெண் கைதிகளையும் விடுதலை செய்துள்ளதாகவும் சிலாங்கூர், கோலாலம்பூர் சிறைச்சாலைத் துறை துணை ஆணையர் அமினோன் அட்னான் தெரிவித்தார்.
விடுதலை செய்யப்பட்டவர்களில் 406 பேர் தங்கள் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் 390 பேர் நிறுவனப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் 137 பேர் சமூகக் காப்பகங்களில் தொண்டூழியர்களாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் திரு அமினோன் தெரிவித்தார். குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் கைதிகள், சிறையில் நன்னடத்தையுடன் நடந்து கொள்வதையும் கருத்தில் கொண்டு இந்த விடுதலை வழங்கப்படுவதாகவும் திரு அமினோன் தெரிவித்தார்.
விடுதலை செய்பவர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குடும்பங்கள் இல்லாதவர்கள் சமூகநல இல்லங்களில் பணியாளர்களாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் திரு அமினோன் தெரிவித்ததாகத் தமிழ் மலர் செய்தி கூறுகிறது.

