டொரோன்டோ: தகுந்த உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகள் ஏர் கனடா நிறுவனத்தின் விமானியாகப் பணியாற்றி, நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்கியதாக 59 வயது ஜெஃப் வால் என்ற மூத்த விமானிமீது கனடா அதிகாரிகள் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற ஜெஃப் வால், 2009ஆம் ஆண்டுமுதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உரிய விமானப் போக்குவரத்துத் துறைக்கான விமானி உரிமம் இல்லாமல் 900 விமானங்களை விமானியாக இருந்து இயக்கியுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
டொரோன்டோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த வழக்கமான சோதனையின்போது, ஜெஃப் வால் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து, விசாரணை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதியன்று அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்மீது போலி ஆவணம் தயாரித்தல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
எனினும், ஏர் கனடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களின் விமானிகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுவதால் பயணிகளின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றும் தங்களது பிற விமானிகளிடம் நடத்தப்பட்ட தணிக்கையில் இதுபோன்ற முறைகேடுகள் வேறு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

