செப்பாங்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டு முனையங்களிலும் சாலைப் போக்குவரத்துத் துறையின் கூடுதல் அதிகாரிகள் பணியமர்த்தப்படவுள்ளனர். வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளைக் குறிவைக்கும் சட்டவிரோதத் தரகர்களால் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்க அவ்வாறு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சாலைப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் ஏடி ஃபட்லி ரம்லி அந்தத் தகவலை வெளியிட்டார். சென்ற மாதம் 12ஆம் தேதிக்கும் 26ஆம் தேதிக்கும் இடையில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
“பாதிக்கப்பட்டவர்கள் இந்தத் தரகர்களால் ஏமாற்றப்படுவதாக எங்களுக்குத் தெரியவந்தது. கோலாலம்பூருக்குக் கூட்டிச்செல்லக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. வழக்கமாக 80 ரிங்கிட் ($25) ஆகும் பயணத்திற்கு 500 முதல் 800 ரிங்கிட் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் பணம் செலுத்தாவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் வாகனங்களை விட்டு இறங்க அனுமதிக்கப்படுவதில்லை,” என்று அவர் கூறினார்.
அதிகாரிகள் ரகசியமாக நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு சட்டவிரோதத் தரகர்களை அடையாளங்காண மலேசியர் அல்லாதவர்களின் உதவியை நாடியதாகவும் திரு ரம்லி சொன்னார்.
அதிரடி நடவடிக்கையின்போது 59 வாகனைங்கள் சோதனையிடப்பட்டன. அவற்றில் 54, இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டதற்காகப் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்ட 54 வாகனங்களில் 27 தனியார் வாகனங்கள்; 16 இணையத்தில் பதிவுசெய்யும் வாடகைச் சேவை வாகனங்கள் என்று கூறப்பட்டது.

