கோத்தா கினபாலு: நோன்புப் பெருநாளை முன்னிட்டு மலேசியாவில் கூடுதலாக ஒருநாள் பொது விடுமுறை வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
சாபா பேரங்காடி ஒன்றில் தேசிய பயனீட்டாளர் விழாவில் பங்கேற்றுப் பேசிய அன்வார், நோன்புப் பெருநாள் முடிவாகும் நாளையொட்டி கூடுதல் பொது விடுமுறை அறிவிக்கப்படும் என்றார்.
நோன்புப் பெருநாள் மார்ச் 20 (வெள்ளிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டால், மார்ச் 23 (திங்கட்கிழமை) கூடுதல் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும். மார்ச் 21 (சனிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டால், அதற்கு முந்தைய நாளான மார்ச் 20 (வெள்ளிக்கிழமை) கூடுதல் பொது விடுமுறை வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.
நோன்புப் பெருநாள் வெள்ளி அல்து சனி எந்த நாளில் வந்தாலும் மக்களுக்குக் கூடுதல் விடுமுறை வழங்கப்படும். மக்கள் குடும்பத்தினருடன் பண்டிகையை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட கூடுதல் விடுமுறை வழங்கப்படுகிறது என்று திரு அன்வார் தெரிவித்தார்.

