ஜப்பானில் நிரந்தர குடியுரிமைக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள்

ஜப்பானில் நிரந்தர குடியுரிமைக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள்

2 mins read
7c135e53-25ba-4861-bb9b-70a69dffa859
வெளிநாட்டவர் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள், பிற கவலைகளுக்குத் தீர்வுகாண கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானில் இனி நிரந்தரவாசத் தகுதியைப் பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது. அதற்கான தகுதிகளை உயர்த்த ஜப்பானிய அரசு திட்டமிட்டுள்ளது.

ஜப்பானியக் குடும்பங்களின் சராசரி வருமானத்தைவிட அதிக வருமானம், எதிர்காலத்தில் குறிப்பிட்ட ஓய்வூதிய பலன்கள் இருப்பது உள்ளிட்டவை புதிய நிபந்தனைகளாகச் சேர்க்கப்படவிருக்கிறது என்று இவ்விவகாரத்தை நன்கு அறிந்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை (ஜூலை 25) தெரிவித்தார்.

பிரதமர் சானே தக்காய்ச்சி தலைமையிலான அரசு, வெளிநாட்டினர் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள், சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிரந்தரக் குடியுரிமை அனுமதி தொடர்பான வழிகாட்டுதல்களை அக்டோபர் 1ஆம் தேதி அரசு திருத்தியமைக்கிறது. மேலும், 2027 ஏப்ரல் முதல் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு கொள்கை அளவில் இந்தப் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படும்.

தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, நன்னடத்தை, சுயமாக வாழ்வதற்குத் தேவையான சொத்துகள் அல்லது திறன்கள் இருப்பது, விண்ணப்பிக்கும் நபரின் நிரந்தரக் குடியுரிமை ஜப்பானின் சிறந்த நலன்களுக்கு உகந்தது ஆகியவை நிரந்தரக் குடியுரிமைப் பெறுவதற்கு முக்கியத் தேவைகளாகும்.

விண்ணப்பதாரர்கள், கொள்கை அளவில் குறைந்தது 10 ஆண்டுகள் ஜப்பானில் வசித்திருக்க வேண்டும்.

2025ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி சீனாவையும் பிலிப்பீன்சையும் சேர்ந்த ஏறக்குறைய 947,000 பேர் நிரந்தரவாசத் தகுதியைப் பெற்றனர்.

புதிய திருத்த வழிகாட்டுதல்களின்படி, விண்ணப்பதாரர்கள் கூடுதல் தகுதியாக ஒரு ஜப்பானியக் குடும்பத்தின் சராசரி வருமானத்தைவிட அதிக ஆண்டு வருமானத்தைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், அந்த வருமான அளவில் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் 30 ஆண்டுகள் சேர்க்கப்படும் தொகைக்கு ஈடான எதிர்கால ஓய்வூதிய பலன்களும் இருப்பது அவசியம்.

குறிப்புச் சொற்கள்