வாஷிங்டன்: ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் பயணம் செய்யக் கட்டணங்கள் தேவையில்லை என்று அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) தெரிவித்தது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தத்தில் ஈரான் குறிப்பிட்ட நிபந்தனைகளைக் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டியுள்ளது. அவற்றை ஈரான் செய்தால்தான் பொருளியல் பலன்களைப் பெறமுடியும் என்று அமெரிக்கா நினைவூட்டியது.
போரினால் சேதமடைந்துள்ள ஈரானை மறுநிர்மாணம் செய்யத் தேவைப்படும் S$384.9 பில்லியன் (US$300 பில்லியன்) மதிப்புள்ள நிதி உதவியும் அதில் அடங்கும். ஆயினும் அந்த நிதி ஈரான் எவ்வாறு அதன் நிபந்தனைகளை நிறைவேற்றுகிறது என்பதை வைத்தே வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அரசாங்கத்தின் மூத்த நிர்வாகி செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஈரானிய நாடாளுமன்ற நாயகர் முகம்மது பகர் கலிபா ஆகியோர் மின்னிலக்க முறையில் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

