பாரிஸ்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துணையுடன் செயல்படும் ChatGPT உள்ளிட்ட தளங்கள் செய்தி தகவல்களைச் சரிவரத் தருவதில்லை என்று ஐரோப்பிய பொது ஒலிபரப்பு அமைப்பு நடத்திய ஆய்வுமூலம் தெரியவந்துள்ளது.
ஆய்வறிக்கை புதன்கிழமை (அக்டோபர் 22) வெளியானது. அதில் ஏஐ தளங்களில் செய்தி நிகழ்வுகள்குறித்த விவரங்கள் பாதிக்கு மேல் தவறாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறான தேதிகளைக் குறிப்பிடுவது, போலியான செய்திகளையும் உண்மையென எடுத்துக்கொள்வது உள்ளிட்ட தவறுகளை ஏஐ தளங்கள் செய்கின்றன.
ChatGPT, கோப்பைலட், ஜெமினாய், பெர்பிளக்ஸ்சிட்டி உள்ளிட்ட ஏஐ தளங்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
ஒட்டுமொத்தமாக 45 விழுக்காடு பதில்களில் ஒரு முக்கியமான தகவல் தவறாக இருந்தது.
ஐந்தில் ஒரு பதிலில் மிகப்பெரிய தவறு இடம்பெற்றிருந்தது. குறிப்பாக அதில் கற்பனை கலந்த தகவலும் பழைய தகவலும் இருந்தன.
நான்கு ஏஐ தளங்களில் ஆக மோசமாகச் செயல்பட்டது ஜெமினாய் தளம் ஆகும். அதன் 76 விழுக்காடு பதில்களில் முக்கியமான தவறுகள் இருந்தன. செய்தியைச் சேகரிப்பதில் அது தடுமாறுகிறது.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 18 நாடுகளில் உள்ள 22 பொது ஊடக நிறுவனங்கள் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஒரே மாதிரியான செய்திக் கேள்விகளை ஏஐ தளங்களிடம் கேட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
கிட்டத்தட்ட 3,000 பதில்களில் பல பதில்கள் பழைய பதில்கள். அதில் புதிய தகவல்கள் ஏதும் இல்லை.
யார் தற்போதைய போப் பாண்டவர் என்ற கேள்விக்கு லியோ என்ற சரியான பதிலை ஏஐ தளங்கள் கொடுக்கவில்லை. அவை போப் பிரான்சிஸ் பெயரையே கொடுத்தது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தவறான தகவல்கள் கொடுத்தாலும் ஏஐ தளங்களைச் செய்தி தெரிந்துகொள்ளப் பயன்படுத்தும் போக்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

