டாக்காவின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏஐ தொழில்நுட்பம் அறிமுகம்

டாக்காவின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏஐ தொழில்நுட்பம் அறிமுகம்

2 mins read
88eef237-a0c5-40a6-845b-0a20f353f542
கடந்த ஏப்ரல் மாதம் முதல் டாக்காவில் உள்ள எல்லைக் கண்காணிப்புக் கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் விதிகளை மீறும் வாகனங்கள் தானியங்கி முறையில் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு உடனடியாகக் குறுந்தகவல் மூலம் அபராத விவரங்கள் அனுப்பப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டாக்கா: உலகின் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றான பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில், போக்குவரத்தைச் சீரமைக்கும் நோக்கில் முதன்முறையாகச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கிப் போக்குவரத்து விதிமுறை அமலாக்க முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் டாக்கா நகரில், இதுவரை போக்குவரத்துக் காவல்துறையினரே கயிறுகளைக் கொண்டு போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அங்குள்ள எல்லைக் கண்காணிப்புக் கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் விதிகளை மீறும் வாகனங்கள் தானியங்கி முறையில் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு உடனடியாகக் குறுந்தகவல் மூலம் அபராத விவரங்கள் அனுப்பப்படுகின்றன.

இதற்கு முன்னர், போக்குவரத்துக் காவல்துறை நேரடியாக அபராதம் விதித்தபோது வாகன ஓட்டுநர்களுடன் நாள்தோறும் மோதல்களும் வாக்குவாதங்களும் ஏற்பட்டு வந்தன. தற்போது இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்கள் விதிமுறைகளுக்குக் கட்டுப்படத் தொடங்கியுள்ளதாகவும் தேவையற்ற அன்றாடத் தகராறுகள் குறைந்துள்ளதாகவும் போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

பங்ளாதேஷின் காவல்துறைத் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சுட்டிக்காட்டும் விதிமீறல்களை ஆய்வாளர்கள் சரிபார்த்து வருகின்றனர்.

முன்னதாக, காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி ஆவணங்களைச் சரிபார்த்து அபராதம் விதித்த நிலைக்கு மாற்றாக, இந்தத் தானியங்கி முறை மூலம் ஒரே நாளில் மட்டும் ஏறத்தாழ 800 விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, இதுவரை குறைந்தது 300 வாகனங்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மிக மோசமாக விதிகளை மீறுபவர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு, மற்றவர்களுக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
பங்ளாதே‌ஷ்போக்குவரத்துசெயற்கை நுண்ணறிவு