கோலாலம்பூர்: அதிகரித்துவரும் விமான எரிபொருள் விலை காரணமாக ஏர்ஏஷியா நிறுவனம் சவால்களை எதிர்நோக்கிவருகிறது.
எனினும், கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் இருந்த சவால்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நெருக்கடி மிக மிகக் குறைவு என்று ஏர்ஏஷியாவை நிறுவியவர்களில் ஒருவரான டோனி ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். மலேசிய மலிவு விலை விமானச் சேவையான ஏர்ஏஷியாவின் நிதி நிலவரம் குறித்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தருவதற்காக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஏர்ஏஷியாவின் மதிப்பு இன்னும் வலுவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய நெருக்கடி பெரும்பாலும் நாடுகளுக்கு இடையிலான அரசியல் சூழல், அதிகரித்துள்ள எரிபொருள் விலை ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் அதேவேளை, பயணங்களுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருந்துவருவதாகவும் அவர் விவரித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது திரு ஃபெர்னாண்டஸ் பேசினார்.
ஏர்ஏஷியாவின் உள்நாட்டுச் சேவைகளை நடத்துவது குறித்து மலேசிய அரசாங்கம், மலேசிய ஏர்லைன்சிடமும் பாத்திக் ஏரிடமும் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. அதற்கு இரு நாள்களுக்குப் பிறகு திரு ஃபெர்னாண்டஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கிடையே, சென்ற ஆண்டு தொடக்கத்திலிருந்து புதிதாகப் பெற்ற ஆறு விமானங்களும் விற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் விற்கப்பட்ட இரு விமானங்களும் அவற்றில் அடங்கும்.
ஏர்ஏஷியா சென்ற ஆண்டு தொடக்கத்திலிருந்து, 10 புதிய ஏர்பஸ் எஸ்இ 321நியோஸ் வகை விமானங்களைப் பெற்றது. அவற்றில் பாதியை அந்நிறுவனம் பிபிஏஎம் நிறுவனத்திடம் விற்றதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
இந்நடவடிக்கை, ஏர்ஏஷியாவின் நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டுவதாக நம்பப்படுகிறது.
