இஸ்தான்புல்: துருக்கியின் அன்தால்யா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியதை அடுத்து, அதன் இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டது.
இச்சம்பவம் நவம்பர் 24ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
அஸிமுத் ஏர்லைன்சுக்குச் சொந்தமான அந்த விமானம் ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த 89 பயணிகளும் ஆறு சிப்பந்திகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகத் துருக்கியப் போக்குவரத்து அமைச்சு கூறியது.
விமானத்தின் இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகளும் புகையும் வெளியானதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
துருக்கியத் தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

