அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ அனைத்துலக விமானநிலையத்தில் பூனை ஒன்று புதிதாக வேலையில் சேர்க்கப்பட்டுள்ளது.
14 வயதான கருப்பு வெள்ளை நிறம் கலந்த அந்த பூனை தற்போது ஊழியரணியில் இணைந்துள்ளதாக விமானநிலையம் அதன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.
பதிவில் பூனை விமானிபோல் உடை அணிந்து அட்டகாசமாக நிற்கும் படமும் இணைக்கப்பட்டிருந்தது. அந்தப் படம் இப்போது சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
சான் பிரான்சிஸ்கோ அனைத்துலக விமானநிலையத்தில் ‘வார் பிரிகேட்’ என்ற ஊழியரணி 2103ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அதில் பயிற்சியளிக்கப்பட்ட செல்லப் பிராணிகள் சேர்க்கப்படும். விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அந்த செல்லப் பிராணிகளுடன் விளையாடி பயண பதற்றத்தைக் குறைத்துக்கொள்ள ஒரு வித்தியாசமான ஏற்பாடு இது.
கொவிட்-19 காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட இந்த சேவை 2021ஆம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
‘வார் பிரிகேட்’ பிரிவில் முதலில் நாய்கள் மட்டும் தான் சேர்க்கப்பட்டது. இப்போது பூனை, முயல் போன்றவை சேர்க்கப்படுகின்றன.