கோபன்ஹேகன்: டென்மார்க்கின் முக்கிய விமான நிலையமான கோபன்ஹேகன் விமான நிலையம் அருகே ஆளில்லா வானூர்திகள் அடையாளம் காணப்பட்டன. நார்வேயில் உள்ள ஆஸ்லோ விமான நிலையப் பகுதியிலும் ஆளில்லா வானூர்திகள் பறந்தன.
அதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்கள் கருதி மேற்கு ஐரோப்பாவில் உள்ள கோபன்ஹேகன் மற்றும் ஆஸ்லோ விமான நிலையங்கள் சில மணி நேரம் தற்காலிகமாக மூடப்பட்டன. இச்சம்பவம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 22) மாலை நேரத்தில் நடந்தது.
இந்நிலையில், வானூர்திகள் பறந்தது குறித்து டென்மார்க் காவல்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
“வானூர்திகளை இயக்கியவர் நல்ல திறன்களைக் கொண்டவராக இருந்திருக்கவேண்டும். சந்தேக நபர்கள் யாரும் பிடிபடவில்லை,” என்று அதிகாரிகள் கூறினர்.
இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டதால் 20,000க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் 100க்கும் அதிகமான விமானச் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது. பல விமானங்களும் திசை திருப்பப்பட்டன.
ஆஸ்லோ விமான நிலையம் அருகே இரண்டு வானூர்திகள் பறந்தன. அதனால் அந்த விமான நிலையம் மூன்று மணி நேரம் மூடப்பட்டது.
கோபன்ஹேகன் விமான நிலையமுள்ள பகுதியில் மூன்று பெரிய வானூர்திகள் பறந்து சென்றன. அதனால் அந்த விமான நிலையம் நான்கு மணி நேரம் மூடப்பட்டது.
இரண்டு விமான நிலையங்களிலும் பறந்த வானூர்திகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதா என்பதை இப்போது சொல்ல முடியாது என்று டென்மார்க் அதிகாரிகள் கூறினர்.

