கிருமி பரவியக் கப்பலில் இருந்த அனைவரும் அபாயமானவர்களே: இயு

கிருமி பரவியக் கப்பலில் இருந்த அனைவரும் அபாயமானவர்களே: இயு

1 mins read
கப்பலில் பயணம் செய்த இரு சிங்கப்பூரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
38a7af60-5e43-4b78-8c27-f83f5523a41f
‘ஹன்டா’ கிருமி பாதிப்பு ஏற்பட்ட ‘எம்வி ஹோண்டியஸ்’ சொகுசுக் கப்பல். - படம்: ராய்ட்டர்ஸ்
ஸ்பெயினில் உள்ள டெனரிஃப் நகரில் ஞாயிற்றுக்கிழமை (மே 10) நங்கூரமிடவுள்ள சொகுசுக் கப்பலில் இருந்து வந்திறங்கும் பயணிகளைத் தனிமைப்படுத்தத் தயாராகவுள்ள தற்காலிக மருத்துவக் கூடாரங்கள்.
ஸ்பெயினில் உள்ள டெனரிஃப் நகரில் ஞாயிற்றுக்கிழமை (மே 10) நங்கூரமிடவுள்ள சொகுசுக் கப்பலில் இருந்து வந்திறங்கும் பயணிகளைத் தனிமைப்படுத்தத் தயாராகவுள்ள தற்காலிக மருத்துவக் கூடாரங்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

ஸ்பெயின்: ஹன்டா என்ற கிருமி பரவிய ‘எம்வி ஹோன்டியஸ்’ எனப்படும் சொகுசுக் கப்பலில் பயணம் செய்த அனைவரும் உயர்நிலை சுகாதார அபாயத்துக்கு உட்பட்டவர்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் (இயு) சுகாதார முகவை வகைப்படுத்தியுள்ளது.

அந்த சொகுசுக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை (மே 10) ஸ்பெயினின் டெனரிஃப் நகரில் நங்கூரமிடுவதற்கு முன்பாக பாதுகாப்பு கருதி இந்த எச்சரிக்கை அறிவிப்பை ஒன்றியத்தின் சுகாதார முகவை சனிக்கிழமையன்று வெளியிட்டது.

நோயின் அறிகுறிகள் இல்லாதோர் சொந்தமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள அவரவர் நாடுகளுக்கு சிறப்பு விமானங்களில் அனுப்பிவைக்கப்படுவர் என்று ஐரோப்பிய நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு மையம் ஆலோசனை வழங்கியது. வழக்கமான வர்த்தக விமானங்களில் அவர்கள் பயணிக்க முடியாது.

அக்கப்பலில் பயணம் செய்தோரின் தாய்நாடுகள் அவர்களை தங்கள் சொந்த நாடுகளுக்கு அழைத்துவர ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன. இதுவரை எட்டுப்பேர் அக்கிருமியால் தாக்கப்பட்டு, மூவர் மரணமடைந்தனர். மூவரில் ஹாலந்தைச் சேர்ந்த தம்பதியும் ஒரு ஜெர்மன் நாட்டவரும் அடங்குவர்.

சம்பந்தப்பட்ட எண்மரில், அறுவர் தொற்றுக்கு உட்பட்டவர்கள். மீதம் இருவரும் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள். இதனை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியது.

கப்பலில் பயணம் செய்த இரு சிங்கப்பூரர்கள்

சொகுசுக் கப்பலில் பயணம் செய்தோரில் இரு சிங்கப்பூரர்களும் உள்ளடங்குவர். அவர்கள் இருவரும் தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

பொதுவாக எலிகளினால் பரவும் இந்தத் தொற்று, மனிதர்களுக்குப் பரவுவது மிகவும் அரிது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்