வாஷிங்டன்: மத்திய கிழக்கு வட்டாரத்திற்கு அமெரிக்கா கூடுதல் கப்பல்களை அனுப்புகிறது.
மேலும் அதிகமான கடற்படையினரை அனுப்பப்போவதாகவும் வாஷிங்டன் தெரிவித்தது. அமெரிக்க ஊடகங்கள் அந்தத் தகவலை வெள்ளிக்கிழமை (மார்ச் 13) வெளியிட்டன.
ஜப்பானில் உள்ள அமெரிக்கத் தளத்திலிருந்து ‘யுஎஸ்எஸ் டிரிப்போலி’ கப்பலுடன் கடற்படையினரும் மத்திய கிழக்கு வட்டாரத்திற்குச் செல்கின்றனர். அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி வால் ஸ்திரீட் ஜர்னல் அதனைத் தெரிவித்தது.
அதே நேரம் மத்திய கிழக்கை நோக்கி மூன்று கப்பல்களில் ஏறக்குறைய 2,500 கடற்படை வீரர்கள் போவதாக நியூயார்க் டைம்ஸ் கூறியது. அமெரிக்க மத்திய தளபத்தியம் கூடுதல் படையினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆதரவளிக்க ஏற்கெனவே அந்த வட்டாரத்தில் கடற்படையினர் இருப்பதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டன. சென்ற மாதம் (பிப்ரவரி) 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களைப் பெரிய அளவில் தொடங்கின. ஆளில்லா வானூர்திகள், ஏவுகணைகளின் துணையோடு டெஹ்ரான் பதிலடி கொடுத்தது. மத்திய கிழக்குப் பதற்றத்தால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.

