புக்கிட் மெர்தாஜாம்: உலகளாவிய போர்ச் சூழல்கள், விநியோகத் தடைகளால் எரிபொருள், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து வருவதைக் கருத்தில்கொண்டு, நிதிநிலையை கவனமாக நிர்வகிக்குமாறு அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
மலேசியாவின் உள்நாட்டுப் பொருளியல் தற்போது கட்டுப்பாட்டில் இருந்தாலும், அனைத்துலக அரசியல் நிலவரங்கள் வெளிப்புற ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்று பள்ளிவாசல் திறப்புவிழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் கூறினார்.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடையால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.
இதனால் உணவு, உரம் போன்ற அத்தியாவசியபத பொருளதகளின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உக்ரேன், ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு, உரங்களின் விலைகளும் உயர்ந்துள்ளன என்று அவர் கூறினார்.
இருப்பினும், RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற அளவில் முடிந்தவரை தக்கவைக்க அரசு முயற்சிப்பதாக அவர் உறுதியளித்தார்.
நோன்புப் பெருநாள் காலங்களில் பொதுமக்கள் வீண் விரயங்களைத் தவிர்த்து, சேமிப்பைப் பெருக்க வேண்டும் என்றும், பெரும் பொருளியல் நெருக்கடி ஏற்பட்டால் அதைச் சமாளிப்பது எளிதல்ல என்றும் அன்வார் எச்சரித்தார்.

