கோலாலம்பூர்: மலேசியப் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பொருளியலை மீளச் செய்வது, மக்கள் நலனை மேம்படுத்துவது, ஊழலை எதிர்ப்பது, அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது ஆகியவற்றுக்கான முயற்சிகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துவருவதாக அவர் கூறினார்.
மேலும், மத்திய அரசாங்கம் நிலையாக இருப்பதாகவும் தொடர்ந்து ஆட்சி நடத்தி, நாட்டைச் சீரான முறையில் கவனித்துக்கொள்ள அதற்குப் போதுமான நாடாளுமன்ற இடங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“புதன்கிழமை (செப்டம்பர் 2) அமைச்சரவையிடம் நான் கூறியதுபோல நாட்டை ஆள்வதற்கும் ஊழல், அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது ஆகியவற்றை ஒழிக்கவும் எங்களுக்குப் போதுமான நாடாளுமன்ற இடங்கள் இருக்கின்றன,” என்று திரு அன்வார் கூறினார். ஊழலையும் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுப்பதற்கான முயற்சிகள் குறிப்பிட்ட ஓர் இனத்தைச் சார்ந்தவையோ குறிப்பிட்ட குழுக்களின் நிலையைப் பாதுகாப்பதற்கானவையோ அல்ல என்று அவர் சொன்னார்.
“அவர்கள் மலாய், சீன, இந்திய இனத்தவராக இருந்தாலும் சரி, சாபா, சரவாக் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இது இனம் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது குறிப்பிட்ட குழுக்கள் சார்ந்ததன்று,” என்றும் திரு அன்வார் எடுத்துரைத்தார்.


