பெனாம்பாங்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், ஊழலுக்கு எதிரான போரின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார். அதே வேளையில் தாம் ஒரு சர்வாதிகாரியல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஊழல் தொடர்பான வழக்குகள் ஆதாரங்கள் அடிப்படையிலும் நடமுறைகளின்படியும் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறிய அவர், தன்னுடைய அறிவுறுத்தலின்படி அல்ல என்றார்.
“நான் உடனடியாக கைது செய்ய உத்தரவிடும் சர்வாதிகாரி அல்ல,” என்றார் அவர்.
“ஆம், நாம் கைது செய்ய வேண்டும், அல்லது நாம் வழக்குத் தொடுக்க வேண்டும் என்று கூறும் பிரதமராக நான் இருக்க விரும்பவில்லை. உண்மையில் ஊழலுக்கு எதிரான போராட்டம் அனைத்து மட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும்,” என்று ஹாங்கோட் கொய்சான் மண்டபத்தில் சாபா அளவிலான காமதான் விழாவைத் தொடங்கி வைக்கும்போது கூறினார்.
இதில், மாநில முதல்வர் நூரும் கலந்து கொண்டார்.
“நாட்டின் அமைதிக்கும் சட்டத்திற்கும் பொறுப்பு வகிப்பதால் முழுமையான விசாரணை, ஆதாரங்கள் இல்லாமல் வழக்குத் தொடுக்கலாம் என்று அர்த்தமல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
உத்தேச சுரங்க ஊழலுடன் ஒரு மத்திய அமைச்சரையும் மாநில சட்டமன்ற உறுப்பினரையும் தொடர்புபடுத்தும் ஒரு காணொளியைப் பற்றியும் அவர் பேசினார்.
அது குறித்த பிரச்சினையில் பொதுமக்களின் கவலையை ஒப்புக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் வெளிப்படையாக நடந்துகொள்ள விரும்புகிறேன். மக்கள் விரும்பும் விஷயங்களை மட்டும் பேசுவதால் பயனல்ல. பிரச்சினை தீவிரமடைந்தபோது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் இந்த விவகாரத்தை எழுப்பியிருந்தேன். நான் ஏன் தலையிடவில்லை என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க முயற்சி செய்கிறேன் என்று மற்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இதுபோன்ற விவகாரங்களை வதந்திகள், குற்றச்சாட்டுகள் அல்லது அவதூறுகளின் அடிப்படையில் கையாள முடியாது.
“சுரங்க ஊழல் சம்பவத்தில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது” என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.