கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், அமைதியை விரும்புபவர்கள் அமைதியாக இல்லாமல் அவதூறு மற்றும் வெறுப்பைத் தூண்டும் குழுவினருக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அவதூறுகளைப் பரப்பும், சத்தமிடும், கோபமான ஒரு சிறிய குழுவினர், பெரும்பான்மை மக்கள் மீது தங்கள் விருப்பத்தைத் திணிக்க முயற்சிக்கின்றனர். சிறுபான்மையினரின் கொடூரமான செயல் தற்போதைய நிலைமை பிரதிபலிப்பதாகத் தெரிகிறது என்று அவர் தெரிவித்தார்.
“தற்போது சத்தம்போடும் சிறுபான்மையினர், கோபமானவர்கள், கொடூரமானவர்கள், உணர்ச்சிகளைத் தூண்டுபவர்கள். அவர்கள் ஒன்றாகக் கூடி, வெறுப்பை விதைத்து, அவதூறுகளைப் பரப்பி, மற்றவர்களுக்குள் அச்சத்தை விதைக்கின்றனர். ஒரு சிறிய குழுவின் அடக்குமுறையும் கொடுமையும், ஒரு பெரிய குழுவை (பெரும்பான்மையினரை) கட்டாயப்படுத்துகிறது.”
“நமது நாட்டைக் காப்பாற்றவும் ஒன்றிணைந்து முன்னேறவும் பெரும்பான்மையினர் தங்கள் மனசாட்சிப்படி பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெரும்பான்மையினர் குரல் கொடுக்க வேண்டுகிறேன்,” என்று சனிக்கிழமை விசாக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மதானி நல்லிணக்க சொற்பொழிவில் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், பிரதமர் அலுவலக அமைச்சர் ஹன்னா இயோ, மலேசிய பௌத்த ஆலோசனைக் குழுவின் தலைவர் லில்லியன் சாங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“முதல் பிரதமர் அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹாஜின் தலைமையில் தேசம் உருவாக்கப்பட்டதிலிருந்து பரவலான சமயப் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் ‘ஒற்றுமையே பலம்’ என்ற அடித்தளத்தில் மலேசியா கட்டமைக்கப்பட்டுள்ளது.
“மலாய் மற்றும் பூமிபுத்ரா சமூகங்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், அரசியலமைப்பில் இஸ்லாம் கூட்டாட்சி மதமாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவரை ஒருவர் பாராட்டுவதில் நாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது,” என்று பிரதமர் அன்வார் மேலும் தெரிவித்தார்.

