சாவ் பாலோ: பிரேசில் நாட்டில் அண்மையில் ஆறு சென்டிமீட்டர் நீள வாலுடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
முதுகுத்தண்டு சரியான வளர்ச்சியடையாதபோது 'ஸ்பைனா பிபிடா எனும் அரியவகை மரபணுக் குறைபாடு ஏற்படுவதே இதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் விளக்கினர்.
முதுகுத்தண்டில் காணப்பட்ட இடைவெளி காரணமாக அக்குழந்தை வாலுடன் பிறந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, சாவ் பாலோ நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, குழந்தையின் முதுகுத்தண்டில் உள்ள துளை அடைக்கப்பட்டு, அதன் வால் பகுதி அகற்றப்பட்டது.
இதன் தொடர்பில் அமெரிக்காவின் ஒகையோவிலுள்ள ஒரு மருத்துவ ஆய்வு நிறுவனம், பிரேசில் மருத்துவ நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டது.
அக்குழந்தையின் தாய்க்கு போதைப் பழக்கமோ வேறெதும் நோயோ இல்லை என்று ஆய்வாளர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

