அண்மைக்காலமாக ரஷ்ய கர்ப்பிணிகள் அதிகளவில் அர்ஜென்டினாவுக்கு வர முயற்சிப்பது குறித்து அர்ஜென்டின அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினாவில் குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் அந்நாட்டு கடவுச்சீட்டைச் பெற முடியும் என்பது அப்பெண்களின் எண்ணம்.
ரஷ்ய கர்ப்பிணிகள் அறுவர், இந்த வாரம் அர்ஜென்டினாவிற்குள் நுழைய குடிநுழைவு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். தாங்கள் சுற்றுப்பயணிகள் என்று அவர்கள் பொய் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அந்தக் கர்ப்பிணிகளில் சிலர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
"ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று மட்டும் ஒரே விமானத்தில் 33 ரஷ்ய கர்ப்பிணிகள் வந்தனர்," என்று குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
சென்ற ஆண்டு 21,757 ரஷ்யர்கள் அர்ஜென்டினாவிற்குள் நுழைந்ததாகவும் அவர்களில் கிட்டத்தட்ட 10,500 பேர் கர்ப்பிணிகள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
"கடந்த சில மாதங்களாக இது மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் 5,819 கர்ப்பிணிகள் அர்ஜென்டினாவிற்கு வந்தனர்," என்றார் அவர்.
அர்ஜென்டினாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக அர்ஜென்டின குடியுரிமை கிடைப்பதோடு, அவர்களுடைய பெற்றோரும் அந்நாட்டுக் குடியுரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.


