லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கோல்ஃப் மைதானத்தில் ஆயுதம் ஏந்திய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் காவல்துறை அலுவலகம் தெரிவித்தது.
திரு டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) லாஸ் ஏஞ்சலிசுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு இரு நாள்களுக்கு முன்பு இச்சம்பவம் நிகழ்ந்தது.
சந்தேக நபர், அண்டை நகரான டெளனியைச் சேர்ந்த 38 வயது ஜீனின் ஜான் டெயில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸ் பகுதியில் உள்ள கோல்ஃ மைதானத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
சாதாரண ஆடைகளில் இருந்த அதிகாரிகள், அந்த ஆடவர் கோல்ஃப் வளாகத்தில் நடந்தபடி படங்களையும் காணொளிகளையும் எடுத்ததைக் கண்டனர். அவர் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்ததுபோலவும் தெரிந்தது. உள்ளூர் காவல்துறை அலவலகம் அறிக்கை மூலம் இத்ககவல்களை வெளியிட்டது.
சந்தேக நபரைத் தடுத்து வைத்தபோது அவரின் காற்சட்டைப் பையில் துப்பாக்கித் தோட்டா ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் காரில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சியின் தேசியக் குழு ஏற்பாடு செய்த நிதி திரட்டு இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க திரு டிரம்ப் செவ்வாய்க்கிழமை மாலை தனது கோல்ஃப் மைதானத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.


