வாஷிங்டன்: பூமிக்குத் திரும்ப முடியாமல் விண்வெளியில் ஒன்பது மாதங்களாக தவித்த விண்வெளி வீரர்கள்,போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் மீண்டும் விண்வெளிக்குச் செல்லத் தயார் என அறிவித்துள்ளனர்.
புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் பயணம் செய்த ‘போயிங் ஸ்டார்லைனஸ்’ விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை.
சுமார் ஒன்பது மாதங்கள் விண்வெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த அவர்கள் பின்னர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் கலத்தில் மார்ச் 18ஆம் தேதி பூமிக்குத் திரும்பினர்.
இந்த நிலையில் புட்ச் வில்மோரும் சுனிதா வில்லியம்சும் முதல் முதலாக செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, மீண்டும் போயிங் விண்கலத்தில் பயணம் செய்வீர்களாக எனக் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த வில்மோர், “ஆம், நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புகிறோம், நாங்கள் அவற்றை சரி செய்வோம். நாங்கள் மீண்டும் அதை வேலை செய்ய வைக்கப்போகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
சுனிதா வில்லியம்சின் இணைத் தலைமையில் போயிங் விண்கலத்தின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த விண்கலம் உண்மையிலேயே ஆற்றல் வாய்ந்தது என்று சுனிதா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு சில பிரச்சினைகள் சரி செய்ய வேண்டியுள்ளது, புட்ச் குறிப்பிட்டதுபோல அதன் தொடர்பில் பலர் பணியாற்றி வருகின்றனர். மற்றபடி அது அருமையான விண்கலம். பிற விண்கலங்களுக்கு இல்லாத பல ஆற்றல்கள் போயிங் விண்கலத்துக்கு உள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்டார்லைனர் கடந்த ஜூன் மாதம் எட்டு நாள் பயணத்தை விண்வெளிக்கு மேற்கொண்டது. ஆனால் ஸ்டார்லைனர் செயல்பாட்டில் சில குறைபாடுகள் இருந்ததை நாசா அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து சுனிதா வில்லியம்சும் புட்ச் வில்மோரும் பூமிக்குத் திரும்புவதில் பிரச்சினை ஏற்பட்டது.