துபாய்: துபாய் அனைத்துலக விமான நிலையத்தில் திங்கட்கிழமை (மார்ச் 16) நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் தீச்சம்பவம் ஏற்பட்டது.
தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாய் நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆளில்லா வானூர்தித் தாக்குதலால் விமான நிலையத்தில் இருந்த எரிபொருள் தொட்டியொன்று சேதமடைந்ததாக துபாய் விமான நிலையம் தெரிவித்தது.
எமிரேட்ஸ் விமான நிறுவனமும் விமானச் சேவை தற்காலிகமாய் நிறுத்தப்படுவதாக அதன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டது.
இந்நிலையில், விமான நிலையத்திற்கு அருகே உள்ள சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக முடக்கப்பட்டது.
துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானங்கள் அல் மக்தோம் அனைத்துலக விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டன.
துபாய் விமான நிலையம் எப்போது விமானச் சேவைகளைத் தொடங்கும் என்பது பற்றிய விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் 11ஆம் தேதி துபாய் அனைத்துலக விமான நிலையம் அருகே இரண்டு ஆளில்லா வானூர்திகள் விழுந்தன. இதனால் அங்குச் சேதம் ஏற்பட்டது.

