பொட்கோரிக்கா: மோன்டினெக்ரோவில் துப்பாக்கிக்காரர் ஒருவர் தாக்குதல் நடத்தியது குறைந்தது 10 பேர் மாண்டனர்.
இத்தாக்குதல் செடின்யே எனும் சிறு நகரத்தில் புத்தாண்டு நாளன்று நிகழ்ந்தது.
உணவகம் ஒன்றைக் குறிவைத்து அந்தத் துப்பாக்கிக்காரர் துப்பாக்கியால் சுட்டதாக மோன்டினெக்ரோ காவல்துறை தெரிவித்தது.
அதன் பிறகு மேலும் மூன்று இடங்களில் அவர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
குடும்ப உறுப்பினர் ஒருவர், இரண்டு சிறுவர்கள் உட்பட பலரை அவர் துப்பாக்கியால் சுட்டதாக அதிகாரிகள் கூறினர்.
தாக்குதல் நடத்திய பிறகு அந்த ஆடவர் தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
45 வயது அலெக்சாண்டர் மார்ட்டினோவிச்சை அதிகாரிகள் வலைவீசித் தேடுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த இடத்தைச் சுற்றி பல மலைகள் இருப்பதால் ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மார்ட்டினோவிச்சை சிறப்புக் காவல்துறையினரும் பயங்கரவாத எதிர்த்துப் பிரிவு அதிகாரிகளும் மலைகளில் தேடி வருவதாக மோன்டினெக்ரோ ஊடகம் செய்தி வெளியிட்டது.
“தாக்குதல் நடத்தியவரை நெருங்கிவிட்டோம். அவரைப் பிடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,” என்று மோன்டினெக்ரோ காவல்துறையின் தலைவர் லஸார் செபானோவிச் தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு சந்தேக நபர் மதிமிஞ்சிய அளவில் மதுபானம் அருந்தியதாக அவர் கூறினார்.
அதன்பிறகு, சண்டை மூண்டதாகவும் அப்போது துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்ததாகவும் அறியப்படுகிறது.
மோன்டினெக்ரோவில் பலர் துப்பாக்கி வைத்திருந்தாலும் துப்பாக்கிச்சூடு காரணமாக ஒரே நேரத்தில் பலர் மரணமடைவது அந்நாட்டில் மிகவும் அரிது.
2022ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் மாண்டனர்.
மாண்டோரில் இரண்டு சிறுவர்களும் துப்பாக்கிக்காரரும் அடங்குவர்.
மாண்டோரின் குடும்பத்தாரிடம் தமது ஆழ்ந்த அனுதாபங்களை மோன்டினெக்ரோ அதிபர் யாக்கோவ் மிலாடோவிச் தெரிவித்துக்கொண்டார்.
மூன்று நாள்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என்றார் அவர்.