கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1 வழியாக மலேசியாவிலிருந்து ஆறு உயிருள்ள ‘கிப்பன்’ குரங்குகளைக் கடத்த முயன்ற பயணியின் முயற்சியை மலேசிய அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
வழக்கமான பயணப்பெட்டிச் சோதனையின்போது, ஸ்கேனர் கருவியில் சந்தேகத்திற்கிடமான உருவம் ஒன்றை விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவினர் கண்டறிந்ததை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது என்று விமான நிலையம் திங்கட்கிழமை (ஜூன் 8) தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், ஒரு கிப்பன் குரங்கு பயணப்பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மற்றொரு படத்தில், சிறிய பொம்மை அளவிலான குரங்கு ஒன்றை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கையில் பிடித்திருக்கும் காட்சி இடம்பெற்றது.
இருப்பினும், அருகிவரும் இவ்வகை குரங்குகளைக் கடத்த முயன்ற பயணி கைது செய்யப்பட்டாரா அல்லது அவர் எந்த நாட்டிற்குப் பயணம் செய்யவிருந்தார் என்பது குறித்த விவரங்களை விமான நிலையம் குறிப்பிடவில்லை.
வனவிலங்கு, தேசிய பூங்காத் துறை, சம்பந்தப்பட்ட விமான நிறுவனப் பங்காளிகளுடன் இணைந்து செயல்பட்ட தனது பாதுகாப்புப் பிரிவினர், அந்தப் பயணியைக் கண்டுபிடித்து, விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே இக்கடத்தல் முயற்சியைத் தடுத்து நிறுத்தியதாக விமான நிலைய நிர்வாகம் கூறியது.

