கேன்பரா: ஆஸ்திரேலியாவில் இயங்கும் ஒரு காப்புறுதி நிறுவனம் ‘கீஸ்ட்ரோக் டெக்னாலஜி’ என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண் பணியாளர் ஒருவரைப் பணியிலிருந்து நீக்கியது.
‘கீஸ்ட்ரோக் டெக்னாலஜி’ என்பது விசைப்பலகையின் தட்டச்சுச் செயல்பாட்டைக் கண்காணிக்க உதவும் ஒரு தொழில்நுட்பம். அதைப் பயன்படுத்தி அந்தப் பெண் வீட்டிலிருந்து பணியாற்றியபோது, வேலை நேரத்தில் திருப்திகரமாகச் செயல்படவில்லை எனக் கூறி அந்நிறுவனம் அவரைப் பணிநீக்கம் செய்துள்ளது.
அந்தப் பெண் அந்நிறுவனத்தில் 18 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார் எனவும் அவர் வீட்டிலிருந்து வேலை செய்தபோது மிகக் குறைந்தளவில் விசைப்பலகையில் தட்டச்சு செய்தார் என்பது போன்ற காரணங்களுக்காக அவரைப் பிப்ரவரி மாதம் பணி நீக்கம் செய்தது எனவும் ஆஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
நியாயமான வேலை தொடர்பான நடுவர் மன்றத்தில் அந்தப் பெண் தன்னுடைய பணிநீக்கத்தைக் குறித்து வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
அதை விசாரித்த ஆணையம், அந்தப் பெண் சரியான காரணத்திற்காகத்தான் பணி நீக்கம் செய்யப்பட்டார் எனக் கூறி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. அப்போதுதான் இந்தச் சம்பவம் குறித்து வெளியுலகிற்குத் தெரியவந்தது.


