சிட்னி: ஆஸ்திரேலியாவில் வரும் திங்கட்கிழமை (மார்ச் 9) முதல் 18 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் ஆபாச இணையத்தளங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் தடை கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
ஆபாச இணையத்தளங்கள் இத்தடையைச் செயல்படுத்தவேண்டும் என்று அந்நாட்டின் இணைய நடவடிக்கைக் கட்டுப்பாட்டு அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சிறுவர்களைப் பாதுகாக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நிலவரப்படி சில ஆபாச இணையத்தளங்கள் ஏற்கெனவே, உறுப்பினர்கள் அல்லாதோர் பதிவுசெய்வதைத் தடைசெய்துவிட்டன. விதிமுறை நடப்புக்கு வருவதற்கு முன்னரே தடை செயல்படுத்தப்பட்டது.
16 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலியா, சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் தடை விதித்தது. அத்தடை, உலகளவிலான போக்கை மாற்றக்கூடியதாக அமைந்தது.
நடப்பில் உள்ள ஆபாச இணையத்தளத் தடையின்கீழ், அந்நாட்டில் சிறார் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படும். இந்நடவடிக்கைகள், ஆபாசப் படங்கள், அதிகளவு வன்முறை, உயிரை மாய்த்துக்கொள்ளுதல், உணவு உட்கொள்வது சம்பந்தப்பட்ட குறைபாடுகள் ஆகியவற்றின் தொடர்பில் போதுமான வயதை எட்டாதோருக்கான பதிவுகளை சிறுவர்கள் பார்க்காமல் இருப்பதற்கான முயற்சிகளில் அடங்கும்.
ஆபாச இணையத்தளங்கள், தேடல் தளங்கள், செயலிச் சந்தைகள் (app stores), விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்கள், சேட்போட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் ஆகியவை இந்நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.

