சிட்னி: அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஏவுகணைகளை வாங்க இருப்பதாக அக்டோபர் 22ஆம் தேதியன்று ஆஸ்திரேலியா அறிவித்தது.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அதிகரித்து வரும் பதற்றநிலையை முன்னிட்டு, தனது கடற்படைக்காக இந்த ஏவுகணைகளை ஆஸ்திரேலியா வாங்குகிறது.
இதற்காக $6.1 பில்லியன் பெறுமானமுள்ள ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட்டுள்ளது.
சீனாவின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்கொள்ள இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மிகவும் குழப்பமான புவிசார்ந்த சூழலை ஆஸ்திரேலியா எதிர்நோக்குவதாக ஆஸ்திரேலியாவின் தற்காப்புத் தொழில், ஆற்றல் விநியோக அமைச்சர் பேட் கொன்ரோய் கூறினார்.
அவர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடற்படையை வலுப்படுத்த இலக்கு கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணுசக்தியால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் அது செயல்பட்டு வருகிறது.