லண்டன்: நாடுகள் மின்சார வாகனங்களுக்கு மிகவும் தாமதமாக மாறினால், எரிவாயு பயன்படுத்தும் வாகனங்கள் அங்கு குவிந்துபோவதற்கு சாத்தியங்கள் உள்ளன என்று கார்பன் டிராக்கர் என்ற கரியமிலவாயு கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா, வடஅமெரிக்கா, ஐரோப்பா ஆகியவை மின்சார வாகன மாற்றத்தில் முன்னிலையிலுள்ளன. எனவே, சுற்றுப்புற மாசு விளைவிக்கும் எரிவாயு வாகனங்களை விற்க கார் தயாரிப்பவர்கள் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளை நாடுவர் என்று அந்த கண்காணிப்பு நிறுவனத்தின் மூத்த வாகன ஆய்வாளர் திரு பென் ஸ்காட் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
மின்சாரமயமான வாகன போக்குவரத்துக்கு மாறாத அல்லது எப்போது மாற்றம் செய்யப்போகிறோம் என்ற தேதியை நிர்ணயிக்காமல் மந்தமாக உள்ள நாடுகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, துருக்கி, இந்தோனீசியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மறுபயனீட்டை ஊக்குவித்து மின்கலத்தைத் தயாரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை வளர்ந்துவருவதால், அவர்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது எதிர்காலத்தில் சாத்தியமாகாது. அத்தகு நாடுகள் சொந்த பயனீட்டுக்கே முன்னுரிமை வழங்குவர்.
தெளிவான கொள்கைகள் இன்றி, எரிவாயு வாகனங்களின் விற்பனையை முடிவுக்குக் கொண்டுவருவது வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுக்கு நிதி நெருக்கடி மோசமடையும் என்றும் அறிக்கையில் உள்ளது.
ஆப்பிரிக்கா, $ 80 பி. அமெரிக்க டாலரை ஒரு ஆண்டுக்கு வாகனப் போக்குவரத்துக்கான எரிவாயு வாங்கச் செலவிடுகிறது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 விழுக்காடாகும். மின்சார வாகனப் பயன்பாட்டுக்கு மாறினால், ஆப்பிரிக்கா, ஆசியா, தென்னமெரிக்கா ஆகிய கண்டங்கள், வர்த்தகப் பற்றாக்குறையை தவிர்த்து $100 பி. அமெரிக்க டாலருக்கு மேல் எரிவாயு இறக்குமதிக்கான செலவை மிச்சப்படுத்தலாம்.
இறக்குமதி தடை, வயது/கரியமிலவாயு உமிழும் வரம்பு, மின்சார வாகனங்களுக்கான தடைநீக்கம் போன்ற கொள்கை விதிகளை அரசாங்கங்கள் அறிமுகப்படுத்துவது முக்கியம்.
வளர்ந்துவரும் சந்தைகள் மின்சாரத்துக்கு மாறிட, கனிமவளச் சுரங்கங்கள், உற்பத்தி, விற்பனை, உள்கட்டமைப்பு, மறுபயனீடு போன்ற பொருளாதார வாய்ப்புகள் மேம்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.