சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் 2024ஆம் ஆண்டு முதல் புதிய வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்காது என அம்மாநிலத்தின் பருவநிலை விவகார அமைச்சர் திருவாட்டி லில்லி டி அம்ப்ரோஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கரிம வெளியேற்றத்தையும் எரிசக்தி கட்டணங்களையும் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
மேலும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் திட்டமிடல் அனுமதி தேவைப்படும் புதிய வீடுகள், கட்டடங்கள் மின்சாரக் கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் அந்த அமைச்சர் கூறினார்.
அம்மாநிலத்தின் மொத்த கரிம வெளியேற்றத்தில் 17 விழுக்காடு வெளியேற்றத்தை எரிசக்தி தொழில்துறை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“2045ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் மொத்த கரிம வெளியேற்றத்தை நிகர பூஜ்ஜியத்திற்கு கொண்டுவரவும் அதிகத் திறன் வாய்ந்த மின்சாரச் சாதனங்களை அதிக விக்டோரியர்கள் பயன்படுத்தவும் எரிசக்தி மீதான நமது நம்பிக்கையைக் குறைப்பதும் மிகவும் முக்கியம். இதன்மூலம் அவர்கள் எரிசக்திக்குச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தவும் முடியும்,” என அந்த அமைச்சர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
வீடுகள், பள்ளிகள்,மருத்துவமனைகள் உட்பட அனைத்து வடிவமைப்பு முழுமை பெறாதக் கட்டடங்களுக்கும் புதிய பொது கட்டடங்களுக்கும் இந்த மாற்றங்கள் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


