கொழும்பு: அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி கைதுசெய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) அந்நாட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கைதுசெய்யப்பட்டபின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 76 வயது ரணில், ‘ஸூம்’ வழியாக நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றார்.
கொழும்பின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்நீதிமன்றத்திற்கு வெளியே அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் எதிர்க்கட்சியினரும் திரண்டிருந்தனர்.
ரணிலுக்குப் பிணை வழங்கியது இலங்கை நீதித்துறை சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டுகிறது என்று ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைச் செயலாளர் விராஜ் கரியவாசம் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ரணில் குற்றம் செய்யாதவர் என்றும் அவருக்கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூடியது என்றும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்தது.
ஆனால், அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதனை மறுத்துள்ளது.


