பாரிசில் மதுபானம் விற்பதற்கும் பொது இடங்களில் உட்கொள்வதற்கும் தடை

பாரிசில் மதுபானம் விற்பதற்கும் பொது இடங்களில் உட்கொள்வதற்கும் தடை

1 mins read
b398bed0-6e71-4bc6-a832-a4230e91c7d5
ஜூன் 26ஆம் தேதிமுதல் தெருக்களிலும் மற்ற பொது இடங்களிலும் மது அருந்துவதற்கும் அதை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படும். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: வெள்ளிக்கிழமை (ஜூன் 26) முதல் பாரிசில் பொது இடங்களில் மது அருந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவில் வெப்ப அலை ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் அதிகமான நோயாளிகள் குவிந்துள்ளதாக அவர்கள் கூறினர்.

“மருத்துவமனை வசதிகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன,” என்று பாரிஸ் காவல்துறைத் தலைவர் பாட்ரிஸ் ஃபாரே கூறினார்.

மேலும், “மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த நெருக்கடி குறைவதை நான் உறுதிசெய்யவேண்டும்,” என்று கூறிய அவர், அதற்குத் தொடர்ச்சியான சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார்.

ஜூன் 26ஆம் தேதிமுதல் தெருக்களிலும் மற்ற பொது இடங்களிலும் மது அருந்துவதற்கும் அதை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படும்,” என்று திரு ஃபாரே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜூன் 25ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவின்படி, ஜூன் 26 பிற்பகல் 12 மணிமுதல் ஜூன் 27 காலை 7 மணி வரையிலும், ஜூன் 27 பிற்பகல் 12 மணிமுதல் ஜூன் 28 காலை 7 மணி வரையிலும் பொது இடங்களில் மது அருந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “முறையான அனுமதிகளைப் பெற்றுள்ள உணவகங்களும் கேளிக்கைக் கூடங்களும் வழக்கமாகப் பயன்படுத்தும் பொது இடங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது,” என்று பாரிஸ் காவல்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்