டாக்கா: பங்ளாதேஷில் இவ்வாண்டில் இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் டெங்கி காய்ச்சலால் இறந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 1,006 பேர் டெங்கி பாதிப்பால் இறந்துள்ளதாகவும் 200,000க்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டுச் சுகாதாரத் துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
கொசுக்களால் பரவும் டெங்கித் தொற்றின் மோசமான பரவல் இந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக அந்தப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
பங்ளாதேஷில் 1960களில் இருந்து டெங்கி பாதிப்பு இருந்துவந்தாலும், அது முதன்முறையாக 2000ஆவது ஆண்டுதான் பதிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில், அவ்வாண்டிலிருந்து 2022 வரை டெங்கியால் அங்கு மாண்டோரின் மொத்த எண்ணிக்கையைக் காட்டிலும், இவ்வாண்டு அத்தொற்றால் அதிக இறப்பு பதிவாகியுள்ளது என்று அந்நாட்டுச் சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“இது பங்ளாதேஷ் மட்டுமன்றி, உலகத்தையே அச்சுறுத்தும் ஒரு பெரிய அளவிலான சுகாதாரப் பிரச்சினை,” என்றும் அவர் சொன்னார்.