டாக்கா: பங்ளாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் தந்தையுடைய வீட்டை இடிக்க அந்நாட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) முயன்றனர்.
அந்தக் கட்டடத்தை இடிக்கத் தேவையான இயந்திரங்களை அவர்கள் கொண்டு சென்றனர்.
திருவாட்டி ஷேக் அசினாவின் தந்தை பங்ளாதேஷின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரஹ்மான்.
அவர் பங்ளாதேஷின் சுதந்திர நாயகனாகப் பரவலாகப் பார்க்கப்படுகிறார்.
ஆனால் திருவாட்டி ஹசினாவின் தந்தை என்ற காரணத்தினால் அவர் மீது இருந்த மதிப்பு தற்போது பங்ளாதேஷில் உள்ள பலருக்கு வெறுப்பாக மாறியுள்ளது.
இ்ந்நிலையில், அரும்பொருளகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்திற்கு பலர் சுத்தியல்களுடன் சென்றனர்.
வீட்டுச் சுவர்களை அடித்து நொறுக்கும் நோக்குடன் அவர்கள் அவ்விடத்தை அடைந்தனர்.
கட்டடத்துக்குத் தீவைக்கப்பட்டபோது ஆர்ப்பாட்டாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
2024ஆம் ஆண்டில் மாணவர்கள் தலைமையில் நடந்த புரட்சியில் அந்த வீடு ஏற்கெனவே மிக மோசமாக சேதமடைந்திருந்தது.
அந்தப் புரட்சி திருவாட்டி ஷேக் அசினாவின் 15 ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
77 வயது திருவாட்டி ஷேக் அசினா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
இதற்கிடையே, வீட்டைப் பராமரிப்பவர் யார் எனத் தெரியவில்லை என்று டாக்கா காவல்துறை தெரிவித்தது.
வீட்டை இடிக்க முயற்சி செய்யும் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க பாதுகாப்புப் படைகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

