பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்க முற்படும் பங்ளாதே‌ஷ்

பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்க முற்படும் பங்ளாதே‌ஷ்

1 mins read
568e935a-574b-4f5c-8ec6-fbde5f1abbc0
நாட்டில் தேவைப்படும் எண்ணெய், எரிவாயுவில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டை இறக்குமதி செய்யும் பங்ளாதே‌ஷ், இதுவரை அதன் மின்சார, எண்ணெய் விலைகளை உயர்த்தவில்லை. - படம்: ஏஎஃப்பி

டாக்கா: மத்திய கிழக்குப் போரால் அதிகரித்துள்ள எண்ணெய் விலையைச் சமாளிக்க பங்ளாதே‌ஷ் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்க முற்பட்டுள்ளது.

பெரும்பாலான தொழிற்சாலைகளில் உர உற்பத்தியை நிறுத்தியிருப்பதன் மூலம் பங்ளாதே‌ஷ் அரசாங்கம் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.

எரிசக்தி விநியோகத்தை நீடிக்க அரசாங்கம் மும்முனை அணுகுமுறையைக் கையாள்கிறது. அவற்றுள் ஒன்றுதான் கடன் வாங்குவது என்றார் பிரதமரின் நிதி, திட்டமிடல் ஆலோசகர் ர‌ஷீத் அல் டிட்டுமிர்.

அனைத்துலகப் பண நிதியம் $1.3 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறிய அவர், ஆசிய மேம்பாட்டு வங்கி $500 மில்லியன் நிதி வழங்க முன்வந்துள்ளதாகவும் சொன்னார்.

கூடுதல் நிதியைப் பெற பங்ளாதே‌ஷ் அரசாங்கம் உலக வங்கியையும் நாடும் என்றார் திரு அல் டிட்டுமிர்.

எரிசக்தித் தேவைகளைப் பூர்த்திசெய்ய வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் எரிசக்தியைப் பெற அரசாங்கம் முற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தேவைப்படும் எண்ணெய், எரிவாயுவில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டை இறக்குமதி செய்யும் பங்ளாதே‌ஷ், இதுவரை மின்சார, எண்ணெய் விலைகளை உயர்த்தவில்லை.

பங்ளாதே‌ஷ் பெரும்பாலும் சவூதி அரேபியாவிலிருந்தும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிடமிருந்தும் கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. அதன் எரிவாயுவில் கிட்டத்தட்ட 35 விழுக்காடு மத்திய கிழக்கிலிருந்து தருவிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்