சோல்: தென்கொரிய நாடாளுமன்றம் பச்சைக் குத்துவதைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மருத்துவ உரிமம் இன்றி பச்சைக் குத்துவோர்மீதான நீண்டகால தடை அதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
செப்டம்பர் 25ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட பச்சைக் குத்தும் சட்டத்துக்கு 202 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 195 உறுப்பினர்கள் சாதகமாக வாக்களித்தனர். அதன் மூலம் மருத்துவ வல்லுநர்களாக இல்லாதோரும் பச்சைக் குத்துவதற்கான உரிமத்தைப் பெற முடியும்.
ஈராண்டுக்குப் பிறகு புதிய சட்டம் நடப்புக்கு வரும்.
மருத்துவ வல்லுநர்களால் மட்டுமே மேற்கொள்ளக்கூடிய ஒரு செயலாக பச்சைக் குத்துவதைக் கருதும் ஒரே வளர்ந்த நாடு தென்கொரியா.
தென்கொரியாவின் பச்சைக் குத்தும் சேவை வழங்குவது சட்டவிரோதம் அல்ல. ஆனால் உரிமம் இன்றி பச்சைக் குத்தும் சேவை வழங்குவோருக்கு 50 மில்லியன் வான் வரை அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.
அத்தகைய கட்டுப்பாடுகளையும் மீறி பச்சைக் குத்தும் சேவை வழங்கும் கொரியர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகவும் பிரபலமாகியுள்ளனர்.
உரிமம் இல்லாமல் பச்சைக் குத்தும் சேவை வழங்குவதற்கு எதிரான நீண்டகால தடையை எதிர்த்த அத்தகைய சேவை வழங்குவோர் புதிய சட்டத்தை வரவேற்றனர்.
பச்சைக் குத்துவதைச் சட்டபூர்வமாக்குவதை ஆதரிக்கும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் மசோதாவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

