மணிலா: போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஃபிலிப்பீன்ஸ் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தற்போது செனட் சபையின் பரிசீலனையில் உள்ளது.
ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளையில் பொய்த் தகவல்களைத் தடுக்கும் நோக்கில் மின்னிலக்க ஊடக பொய்த் தகவல் எதிர்ப்புச் சட்டம் (Digital Media Anti-False Information Act) என்ற அந்த மசோதா வரையப்பட்டது. கடந்த ஜூன் மாதம் அதற்குப் பிரதிநிதிகள் அவையில் அனுமதி கிடைத்தது.
அந்த மசோதாவை வரைந்தோருக்குத் தலைமை தாங்குபவர், பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியரின் மூத்த மகனும் பேரவை பெரும்பான்மைத் தலைவருமான சாண்ட்ரோ மார்க்கோஸ்.
மசோதா சட்டமாக்கப்பட்டால், தெரிந்தே போலிச் செய்தியை உருவாக்குவது, அதற்கு நிதி அளிப்பது, கைகொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிப்பது அல்லது தேசியப் பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக இருக்கும் குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.
தெரியப்படுத்தப்படாத செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்கள், காணொளிகள், ஒலிப் பதிவுகள் ஆகியவை அதில் உள்ளடக்கப்படும்.
மசோதா தொடர்பில் அதிகாரம் அரசாங்கத்திடம் இருப்பதை விமர்சித்து பிலிப்பீன்சில் சிவில் சமூகக் குழுக்கள், செய்தியாளர்கள் ஆகிய தரப்புகளிடமிருந்து எதிர்ப்பு தலைதூக்கியது. 2022ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது திரு மார்க்கோஸ்கூட பொய்த் தகவல்களால் பலனடைந்ததாக ஒரு வாதம் உள்ளது.
பிலிப்பீன்சின் பொய்ச் செய்தி மசோதாவை ஆதரிக்கும் சிலர் அதை சிங்கப்பூரின் போஃப்மா சட்டத்துடன் ஒப்பிடுகின்றனர். எனினும், அதிக நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் சமூகமாகக் கருதப்படும் சிங்கப்பூருடன் பிலிப்பீன்சை ஒப்பிட முடியாது என்றும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.


