பிந்துலு: மலேசியாவின் பிந்துலு நகரில் அமைந்துள்ள ‘ஆர்பிஆர் செபியூ’ வட்டாரத்தின் லோரோங் பி5 பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீச்சம்பவத்தில் ஆறு தரைவீடுகள் சேதமடைந்ததாகவும் குடியிருப்பாளர்கள் 67 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அந்த வட்டாரத் தீயணைப்பு, மீட்புத் துறைத் தலைவர் வான் கமருதீன் வான் அகமது உறுதிப்படுத்தினார்.
“மூன்று வீடுகள் முற்றிலுமாகக் கருகிவிட்டன. மற்றொரு வீடு 70 விழுக்காடு சேதமானது. மற்ற இரண்டு வீடுகள் 30 விழுக்காடு சேதமடைந்துள்ளன. குறிப்பாக அவற்றின் கூரைப் பகுதிகளும் சுவர்களும் சேதமடைந்துள்ளன,” என்றார் திரு வான் கமருதீன்.
சம்பவத்தில் மூன்று வாகனங்கள் கருகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சனிக்கிழமை பின்னிரவு 12.26 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் கூறிய அவர், ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிட்டார்.