கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் பால் பண்ணைகளில் காற்று, கழிவுநீர் மூலம் பறவைக் காய்ச்சல் பரவக்கூடும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மேலும், முன்பு கணிக்கப்பட்டதைவிட கூடுதலான வழிகளில் அந்நோய் பரவும் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது.
பாதிக்கப்பட்ட 14 பண்ணைகளிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பசு சுவாசித்தக் காற்றிலும் பால் கறக்கும்போது அதைச் சுற்றிருந்த காற்றிலும் பண்ணைக் கழிவுநீரிலும் எச்5என்1 கிருமி இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
பாதிக்கப்பட்ட பசுவின் பாலைப் பயன்படுத்துவதால் அக்கிருமி பரவுவதைத் தாண்டி, பல்வேறு வழிகளில் பறவைக் காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர்கள் எடுத்துக்கூறினர்.
மே 5 ஆம் தேதி ‘பிஎல்ஓஎஸ் பயாலஜி’ சஞ்சிகையில் ஆய்வின் முடிவுகள் வெளியாகின.
அமெரிக்க கால்நடைகளிடையே பரவிவரும் அந்நோய், பண்ணைத் தொழிலாளர்களையும் பிற விலங்குகளையும் பாதிக்கலாம் என்ற கவலையை அவை அதிகரித்துள்ளது.
நாங்கள் சேகரித்த தரவுகள், காற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பண்ணைக் கழிவுநீரிலும் தொற்றும் தன்மை வாய்ந்த எச்5என்1 கிருமி இருப்பதை உறுதிப்படுத்துகின்றன என ஆய்வை இணைந்து வழிநடத்திய எமோரி பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் நிபுணரான பேராசிரியர் சீமா லக்டாவாலா தெரிவித்தார்.
மேலும், “வெளிப்படையான நோய் அறிகுறிகள் இல்லாத பசுக்கள் உட்பட பல பசுக்களின் பாலில் அதிக அளவிலான கிருமி பரவியிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். பண்ணைகளில் அக்கிருமி பல்வேறு வழிகளில் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதையே ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன,” என அவர் கூறினார்.

