குவெட்டா: பாகிஸ்தானில் சுரங்க ஊழியர்கள் இருந்த வாகனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர், அறுவர் காயமுற்றனர் என்று உள்ளூர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 14) தெரிவித்தனர்.
தெற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஹர்னாய் பகுதியில் உள்ள சுரங்கத்துக்கு ஊழியர்களைக் கொண்டு சென்ற லாரி ஒன்று தாக்கப்பட்டது. பலுசிஸ்தான், கிளர்ச்சியாளர்கள் பலகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வட்டாரமாகும்.
“மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுக் கருவி ஒன்று சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்தது. லாரி, சுரங்க ஊழியர்களை அவர்கள் வேலை செய்யும் இடத்தில் சேர்த்தவுடன் குண்டு வெடித்தது,” என்று ராணுவ உதவியாளர் ஒருவர் கூறினார். அந்த வெடிகுண்டு, வேறு இடத்திலிருந்து இயக்கக்கூடிய ஒன்றாக இருந்திருக்கலாம் என்றும் பெயர் தெரிவிக்க விரும்பாத அந்த ராணுவ உதவியாளர் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
குண்டு வெடித்தபோது தாக்கப்பட்ட லாரியில் 17 சுரங்க ஊழியர்கள் இருந்ததாக அவ்வட்டாரத்தின் இணை ஆணையர் ஹஸ்ரத் வாலி அகா சொன்னார். காயமடைந்தோரில் இருவர் கவலைக்கிடமாக இருக்கின்றனர் என்று உள்ளூர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

