குண்டு காயங்களுடன் இறந்தவரின் உடல் மருத்துவமனையில் வீசப்பட்டது

ஜோகூர் பாரு பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

குண்டு காயங்களுடன் இறந்தவரின் உடல் மருத்துவமனையில் வீசப்பட்டது

2 mins read
38b0f41a-7480-4060-92fe-3187a13739da
ஜோகூர் பாருவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ஜோகூர் பாரு: மலேசியாவின் இஸ்கந்தர் புத்ரி பகுதியிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த ஒரு பயங்கர கொள்ளை முயற்சி ஒருவரின் உயிரைப் பறித்துள்ளது. சுல்தானா அமினா மருத்துவமனையில் அவர் பின்னர் இறந்து கிடந்தார்.

ஜூலை 3 பின்னிரவு 12.10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது, முகமூடி அணிந்திருந்த நான்கு ஆடவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வெட்டுக்கத்தியுடன், இரண்டாம் இணைப்பு விரைவுச்சாலைக்கு (Second Link Expressway) அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தை வழிமறிக்க முயன்றனர்.

இந்தத் துணிச்சலான தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அதில், நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை அந்த ஆடவர்கள் உடைப்பது தெரிகிறது.

இதற்குப் பதிலடியாக, காரில் இருந்த பயணிகளில் ஒருவர் பலமுறை துப்பாக்கியால் சுட்டார். இதனால், தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். மூன்று சந்தேக நபர்கள் தங்களின் வாகனத்திற்குத் திரும்ப ஓடினர், நான்காமவர் தப்பியோடினார்.

கொள்ளை முயற்சி நடந்த சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சுல்தானா அமினா மருத்துவமனையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதை ஜோகூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் எம்.குமார் உறுதிப்படுத்தினார்.

“பின்னிரவு 1.40 மணியளவில், பல துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் ஒரு நபரின் உடல் அங்கு கிடப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர். இருவர் இருண்ட நிற வாகனத்தில் உடலை மருத்துவமனை நுழைவாயிலில் விட்டுச் செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டின,” என்று திரு குமார் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இறந்தவர் பின்னர் கெடா மாநிலம், சுங்கை பட்டானியைச் சேர்ந்த 42 வயது உள்ளூர்வாசி என்றும் அவர் மீது நான்கு குற்றப்பதிவுகள் உள்ளன என்றும் திரு குமார் மேலும் கூறினார்.

அந்த ஆடவரின் நெஞ்சிலும் வயிற்றிலும் ஏற்பட்ட பல துப்பாக்கிக்குண்டு காயங்களால் அவர் உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது என்றும் திரு குமார் தெரிவித்தார்.

இறந்தவர், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரா என்று கேட்கப்பட்டபோது, ​​விசாரணை இன்னும் தொடர்கிறது என்று திரு குமார் பதிலளித்தார்.

ஆரம்பகட்ட விசாரணையைத் தொடர்ந்து, அதே நாள் இரவு 7 மணியளவில் கோலாலம்பூரின் டாங் வாங்கி பகுதியில் மூன்று ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“30 முதல் 40 வயதுக்குட்பட்ட மலேசியர்கள் இருவரும் இந்திய நாட்டவர் ஒருவரும் ஜோகூர் காவல்துறை தலைமையகம், இஸ்கந்தர் புத்ரி மாவட்ட காவல்துறையின் கூட்டுப் படையால் கைதுசெய்யப்பட்டனர்,” என்று திரு குமார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்