சிங்கப்பூர் ஏர்லைன்சுக்குச் (எஸ்ஐஏ) சொந்தமான எஸ்கியூ478 விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) அது தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து ஜோகனஸ்பர்க் வழியாக கேப் டவுன் நோக்கிச்செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தொலைபேசி அழைப்பு வந்ததை ‘அக்சா’ எனும் தென்னாப்பிரிக்க விமான நிலையங்கள் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
விமானம் ஓஆர் தாம்போ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அவசரகாலச் சேவைப் பிரிவினர், தீயணைப்பு, மீட்புப் படையினர், தென்னாப்பிரிக்கக் காவல்துறையினர் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மோப்ப நாய்களின் உதவியுடன் காவல்துறை விமானத்தைச் சோதனையிட்டதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டது.
அந்த விமானத்தில் 58 பயணிகளும் 15 விமானச் சிப்பந்திகளும் இருந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது. அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கூடுதல் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் விமானம் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.37 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.29 மணிக்கு விமானம் கேப் டவுன் சென்றடைந்தது.
திட்டமிடப்பட்ட நேரத்தைவிட பயணம் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் தாமதம் அடைந்ததாக எஸ்ஐஏ கூறியது.