சிட்னி: ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸ், துப்பாக்கிச் சட்டத்தைக் கடுமையாக்கத் திட்டமிட்டுள்ளது.
மேலும், பயங்கரவாதச் சின்னங்களைக் காட்சிப்படுத்துவதற்குத் தடை விதிக்கவும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.
டிசம்பர் 14ஆம் தேதி, போண்டாய் கடற்கரையில் யூதர்கள் கொண்டாட்டத்தின்போது தந்தை, மகன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டத்தைக் கடுமையாக்குவதற்கான மசோதா அம்மாநில நாடாளுமன்ற கீழவையில் தாக்கல் செய்யப்பட்டது.
டிசம்பர் 22ஆம் தேதி, அம்மாநில எதிர்க்கட்சியின் ஆதரவுடன் அம்மசோதாவுக்குக் கீழவை ஒப்புதல் அளித்தது.
பயங்கரவாதத் தடை, பிற சட்டத் திருத்த மசோதாக்கள் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிநபர்கள் நான்கு துப்பாக்கிகளும் விவசாயிகள் 10 துப்பாக்கிகள்வரை வைத்திருக்க அனுமதிக்கும் சட்டத்தை அம்மாநில அரசு முன்மொழிந்துள்ளது.

