டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம் நோக்கிச் சென்ற ராயல் கரீபியன் சொகுசுக் கப்பலின் மேல்மாடத்திலிருந்து விழுந்து 12 வயதுச் சிறுவன் ஒருவன் இறந்துபோனான்.
மதுக்கூடங்களும், உணவகங்களும், கடைகளும் அமைந்துள்ள கப்பல் தளத்தில் அவன் விழுந்தான். செப்டம்பர் 7ஆம் தேதி இரவு நேர்ந்த இத்துயர நிகழ்வில் மாண்ட சிறுவன் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
‘ஹார்மனி ஆஃப் தி சீஸ்’ என்ற அக்கப்பலின் 14ஆம் தளத்தில் தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி அவன் எட்டாம் தளத்தில் விழுந்துவிட்டதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர் என்று பிரிட்டிஷ் நாளிதழான ‘தி சன்’ தெரிவித்தது.
அச்சிறுவனைப் பிழைக்க வைக்க கப்பல் ஊழியர்கள் முயன்றனர். ஆயினும், ஏழு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு கப்பல் டெக்சஸ் மாநிலத்தின் கேல்வஸ்டன் துறைமுகத்தைச் சென்றடையும் முன்னரே அவன் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தம் குடும்பத்தினருடன் அச்சிறுவன் சொகுசுக் கப்பலில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
கப்பலில் சிறுவன் விழுந்து மாண்டது தொடர்பில் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு (எஃப்பிஐ), கடலோரக் காவல்படையுடனும் சுங்க, எல்லைப் பாதுகாப்பு அமைப்புடனும் இணைந்து விசாரித்து வருகிறது.
சிறுவன் மேலிருந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இதனிடையே, சம்பவத்தை உறுதிப்படுத்திய ராயல் கரீபியன், அதுகுறித்த மேல்விவரங்களை வெளியிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
உலகின் ஆகப் பெரிய சொகுசுக் கப்பலான ‘ஹார்மனி ஆஃப் தி சீஸ்’ கடந்த 2016 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது, 25 மாடிக் கட்டடத்தைவிட உயரமானது என்றும் ஐஃபில் கோபுரத்தின் உயரத்தைவிட நீளமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.