ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் பதின்ம வயதினர் சமூக ஊடகங்கள் பயன்படுத்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுப்பாடு செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) முதல் நடப்புக்கு வந்துள்ளது.
பதின்ம வயதினர் வன்முறை மற்றும் சட்டவிரோதமான தகவல்களைச் சமூக ஊடகத்தில் பார்த்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான சட்டத்திற்கு 2025ஆம் ஆண்டு ஒப்புதல் கிடைத்தது. தற்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, சிறுவர் சிறுமியர் இன்ஸ்டகிராம் செயலி மூலம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகச் சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர்.
212 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிரேசிலும் சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகளை விதித்த நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள் வயது வரம்பைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 16 வயதுக்குக்கீழ் உள்ளவர்களின் கணக்குகள் பெரியவர் ஒருவர் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று சமூக ஊடக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களுக்குச் சிறுவர் சிறுமிகள் அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்பதில் பல உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் ஆஸ்திரேலியா பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கட்டுப்பாடுகளை விதித்தது. அதைப் பின்பற்றி சில நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

