விமானம் ரத்தானதால் நின்றுபோன திருமணம்

விமானம் ரத்தானதால் நின்றுபோன திருமணம்

2 mins read
9c886ece-d62a-4b39-91ff-06abc0117f26
திருமண ஏற்பாடுகளுக்காகச் செலவிட்ட 70,000 டாலருக்கும் அதிகமான தொகையையும் மணப்பெண் இழந்தார். படம்: ஊடகம் -

கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் மணப்பெண்ணால் தனது திருமணத்திற்கே செல்ல முடியாமல் போனது.

இச்சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்ததாக 'இன்சைடர்' செய்தி தெரிவிக்கிறது.

கேத்தி டெம்கோ என்ற அந்த மணப்பெண் கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவின் மிசோரியில் இருந்து தென்னமெரிக்க நாடான பெலிசுக்குச் செல்ல சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். பெலிசில் அவருக்கும் மைக்கல் என்பவருக்கும் திருமணம் நடக்கவிருந்தது.

இந்நிலையில், பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற தயாராக இருந்தபோது, விமானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அதன் விமானி தெரிவித்தார்.

விமானச் சிப்பந்திகள் மூவர் குறைவாக இருந்ததால் கடைசி நேரத்தில் விமானத்தை ரத்துசெய்ய அதன் விமானி முடிவெடுத்ததாகக் கூறப்பட்டது.

கடைசி நேரத்தில் விமானம் ரத்தானதை அடுத்து, கேத்தி வேறு விமானத்திற்கு முயன்றும் அது முடியாமல் போனது. மணமகன் மைக்கல், அவருக்கு முன்னதாகவே பெலிஸ் சென்றுவிட்டார்.

"ஏழு விமான முகவர்களை நாடினேன். எப்படியாவது பெலிசுக்குச் சென்றுவிட வேண்டும் என்ற முயற்சியில் என் மொத்த குடும்பமும் 18 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தது. மெக்சிகோ சென்று, அங்கிருந்து பேருந்து மூலமாக பெலிஸ் செல்லவும் முயன்றோம். ஆனால், எதுவுமே ஈடேறவில்லை," என்றார் கேத்தி.

டிசம்பர் 30ஆம் தேதி காலை முழுவதும் அழுதவாறே இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, தானும் தன் விருந்தினர்களும் தங்குவதற்காக 70,000 அமெரிக்க டாலருக்குமேல் கொடுத்து சொகுசு விடுதி அறைகளை முன்பதிவு செய்திருந்த நிலையில், அவையனைத்தும் வீணாயின. அப்பணத்தைத் திருப்பித் தர விடுதி மறுத்துவிட்டது.

காதலனையும் பணத்தையும் ஒருசேர இழந்த அதிர்ச்சியில், செயலற்றுப்போனதாகக் குறிப்பிட்டார் கேத்தி.