நேப்பாளத்தில் பேருந்து விபத்து; 19 பேர் உயிரிழப்பு

நேப்பாளத்தில் பேருந்து விபத்து; 19 பேர் உயிரிழப்பு

1 mins read
0de4528f-cb26-4141-a23e-06ad04ad7f58
உயிரிழந்தவர்களில் இதுவரை ஒன்பது பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நேப்பாளக் காவல்துறையினர், அந்தப் பேருந்தில் மொத்தம் 44 பேர் பயணம் செய்ததாகக் கூறினர். - படம்: ஏஎஃப்பி

காத்மாண்டு: நேப்பாளத்தின் மேற்குப் பகுதியில் அந்நாட்டு நேரப்படி திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 23) அதிகாலையில் பேருந்து ஒன்று மலைப்பாதையிலிருந்து கீழே விழுந்ததில், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் உட்பட 19 பேர் உயிரிழந்ததாக நேப்பாளக் காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் இதுவரை ஒன்பது பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த காவல்துறையினர், அந்தப் பேருந்தில் மொத்தம் 44 பேர் பயணம் செய்ததாகக் கூறினர்.

சுற்றுலா நகரமான பொக்காராவிலிருந்து நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து, காத்மாண்டுவுக்கு மேற்கே 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாதிங் மாவட்டத்தின் பெஹிகாட் என்ற இடத்தில் சாலையிலிருந்து 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 25 பேரில் நியூசிலாந்து மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

காயமடைந்தவர்கள் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மலைப்பாங்கான நேப்பாளத்தில் சாலைகளின் தரம் குறைவாக இருப்பதால் சாலை விபத்துகள் அங்கு அதிகம் நிகழ்வதாகவும் அந்நாட்டில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்